சவுகார்பேட்டை தரகர்கள் மூலம் ரூ80 கோடிக்கு புதிய நோட்டுகள் மாற்றினேன்: சேகர் ரெட்டி ஒப்புதல்
கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் ரூ80 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் பிடிபட்டன. இதை தாம் எப்படி மாற்றினேன் என ஐடி அதிகாரிகளிடம் சேகர் ரெட்டி விவரித்திருக்கிறார்.
சென்னை: சவுகார்பேட்டை தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ80 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ்கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டிதான் தமிழக அரசின் பெரும்பாலான பணிகளை கான்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார்.
சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ரூ80 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் பிடிபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ80 கோடி பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் சேகர் ரெட்டி.