ஒரு நைட்டி கூட வாங்கத் தெரியாமலா மாமியாருங்க இருக்காங்க இந்தக் காலத்துல...!!!
சென்னை: கதையை இழுத்தடிக்கவும், எபிசோடுகளின் எண்ணிக்கையைக் கூட்டவும் இந்த சீரியல்காரர்கள் செய்யும் ஜாலங்கள் இருக்கே.. அடேங்கப்பா.. பல நூறு பக்க புத்தகமே போடலாம் அதை எழுதித் தள்ள.
ஒவ்வொரு சீரியலையும் குறைந்தது 2 வருடம், 3 வருடம் என்று ஜவ்வாக இழுத்தாக வேண்டும் என்பதால் முடிந்தவரை சீன்களை பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இயக்குநர்கள். சவுண்டுதான் ஜாஸ்தியாக இருக்கும். ஆனால் காட்சிகளில் நடிப்பவர்களைப் பார்த்தால் ஸ்லோ மோஷன் படம் போலவே இருக்கும்.
அப்படி ஒரு ஜவ்விழுப்பை ஒவ்வொரு காட்சியிலும் பார்க்கலாம் - தவறாமல். இப்படித்தான் நேற்று ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது.
பாசக்கார மாமியார்
வழக்கமாக மாமியார்கள் எல்லாம் கண்ணை முறைத்து, வாயால் கத்தி போல அறுத்து, வசவால் துப்பாக்கி போல சுடும் கதாபாத்திரங்களாகத்தான் இருப்பார்கள் பெரும்பாலான சீரியலில். ஆனால் இந்த பிரியமானவளே சீரியலில்தான் அழகான, அமைதியான, அன்பான, பாசக்கார மாமியாரைப் பார்க்க முடிகிறது.
வாய்த்துடுக்கு மருமகள்
ஆனால் இந்த அமைதியான மாமியாருக்கு வந்த முதல் மருமகளோ பயங்கர வாய்த்துடுக்காக இருக்கிறார். கேட்டால் எதார்த்தம், இயல்பு என்று பீலா வேறு விடுகிறார். பாப்பா பேரு அவந்திகா.
நேத்து கதையைக் கேட்டீங்களா
தண்ணீர் குடிப்பதற்காக வாட்டர் கேனை எடுக்கப் போனபோது நேற்று இரவு எதேச்சையாக இந்த சீரியலின் ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. பார்த்தால் அதில் வந்த காட்சியும், வசனமும்.. அடேங்கப்பா!
நைட்டி போடுங்க அத்தை
அத்தையம்மாவிடம் இந்த அவந்திகா மருமகள் வசனம் பேசுகிறார்.. எப்படி.. இப்படி.. அத்தை நீங்க இனிமே நைட்டிதான் போடனும். அதுதான் வசதி. சேலையை விட வசதி. சரிஞ்சு விழுந்தாலும் எடுத்து விட்டுக்கத் தேவையில்லை.
எனக்கெதுக்கு அவந்திகா வேண்டாமே
உடனே அத்தை சொல்றாங்க.. எனக்கெதுக்கும்மா இதெல்லாம். நான் போட மாட்டேன். உடனே அவந்திகா. அதெல்லாம் கிடையாது. நீங்க போட்டே ஆகனும். இதைப் போட்டுட்டுத்தான் இன்னிக்குத் தூங்கனும். அதைப் பார்த்துட்டுத்தான் நான் தூங்குவேன்.. !
அட அப்ரண்டிஸ்களா
அடப்பாவிகளா நைட்டி கண்டுபிடிச்சு பல காலமாகி, அதிலும் டிசைன் டிசைனா வந்து அதை விட பல காலமாகி, இப்போது பல பெண்கள் அதை சுடிதார் போல பாவித்து ஸ்கூலுக்கெல்லாம் போட்டுக்கொண்டு போய் பிள்ளைகளை டிராப் செய்யும் அளவுக்கு நாடு வளர்ந்து நாமும் வளர்ந்து விட்ட நிலையில், நைட்டியின் அருமை பெருமையை விளக்கி இப்படி ஒரு காட்சியா...
இந்த வாணி ராணி பாத்தீங்களா மக்களே!
இத விடுங்க இந்த வாணி ராணி பாத்திருக்கீங்களா.. அதுல எப்பப் பார்த்தாலும் எல்லாப் பேரும் நிறைய நிறைய சிரிக்கிறாங்க. ஒவ்வொருத்தர் சிரிக்கிறதையும் ரெண்டு ரெண்டு நிமிஷம் நிறுத்தி நிறுத்தி காட்டுறாங்க.
வாணி சிரிச்சா ராணி. ராணி சிரிச்சா வாணி
வாணி சிரிச்சா உடனே ராணி சிரிப்பாங்க.. ராணி சிரிச்சா அவங்க வீட்டுக்காரர் சிரிப்பாரு. அவரு சிரிச்சா உடனே மக தேனு சிரிக்கும். தேனு சிரிச்சா.. அவங்க அக்கா சிரிக்குது. அது சிரிச்சா ஹவுஸ் ஓனர் அம்மா சிரிக்குது... அவங்க சிரிச்சா அந்தம்மாவோட வீட்டுக்காரர் கஷ்டப்பட்டு சிரிக்கிறார். இப்படி வரிசையா சிரிக்கிறாங்க.. ஒவ்வொருத்தரையும் மாத்தி மாத்தி காட்டுறாங்க.. நல்லா நேரம் போய்ருது. பல சீரியல்கள்ள இப்படித்தான் நேரத்தைக் கடத்த விதம் விதமாக சித்திரவதை பண்றாங்க
ஏன் டைரடக்கர்களே இப்படி.. மாத்தி யோசிங்கப்பா.. மாத்தி யோசிங்கப்பா!