களக்காட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நெல்லைக்குள் சிறுத்தை வந்தது எப்படி?
நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதியான திரு்மால் நகரில் சிறுத்தை புகுந்தது எப்படி என வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் நேற்று புகுந்த சிறுத்தை ஒன்று நகரையே உலுக்கி விட்டது. சில மணி நேர போராட்டத்திற்குப் பின்பு அந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு லாவகமாக பிடித்து விட்டனர். இந்த சிறுத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திலிருந்து தப்பி வந்தது என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் வெங்கடேஷ் கூறுகையில், காலை 6 மணிக்கு நெல்லை திருமால் நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்ததாக பொதுமக்களால் தகவல் தரப்பட்டது. இதையடுத்து வனத்துறையை சேர்ந்த 50 பேர் திரு்மால் நகருக்கு விரைந்தோம்.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒவ்வொரு வீட்டு கம்பவுண்ட் சுவராக தாண்டி வீடு வீடாக சென்றது. காலை 9.30 மணிக்கு ஒரு வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்குள் பாய்ந்து பதுங்கியது. உடனே வனத்துறையினர் அந்த கழிவறையின் கதவை அடைத்து வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் வெளிப்புறம் இருந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி மூலம் மருத்து செலுத்தப்பட்டது. மயங்கியதும் சிறுத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.
முத்தூர் மலையை ஓட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலையும் உள்ளது. எனவே இந்த பகுதி வழியாக சிறுத்தை நெல்லை மாநகரில் ஊடுருவி இருக்கலாம் என சந்தேக்கிறோம். இருப்பினும் சிறுத்தை எங்கிருந்து வந்தது என தொடர்நது விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
சம்பந்தப்பட்ட வனப்பகுதியிலிருந்து திருமால் நகர் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு தூரத்தை சிறுத்தை எப்படிக் கடந்து வந்தது என்பது புதிராக உள்ளது.
இந்த நிலையில் சிறுத்தை தாக்கி காயம் அடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமும், தீயணைப்பு வாகனங்கள் மூலமும் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏற்கனவே பாபநாசம் கீழனை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சுற்றுலா பயணிகள் பீதியுடன் கூறியிருந்ததை நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.