தடம்புரண்டது ஹவுரா விரைவு ரயில்: ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும்
கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய ஹவுரா விரைவு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து தடம் மாற்றுவதற்கு நேற்றிரவு இயக்கியபோது அதன் 4 பெட்டிகள் தடம்புரண்டன.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய ஹவுரா விரைவு ரயில் நேற்றிரவு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து தடம் மாற்றுவதற்கு இயக்கியபோது எதிர்பாராதவிதமாக நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஆகையால் இன்று காலை புறப்பட வேண்டிய ரயிலானது இன்று நள்ளிரவு கொல்கத்தா புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கபடுகின்றன.
இதே போன்று வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 8 .10 மணி அளவில் கொல்கத்தாவுக்குஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கபடுகிறது. இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்காக இந்த ரயில் நேற்று இரவு நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து தடம் மாற்றி இயக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக நான்கு ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.
இதனால் கன்னியாகுமரியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்பு பணிகள் முடிக்க குறைந்தபட்சம் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் அந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் குளறுபடிகள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் ரயில்வே நிர்வாகத்தின் கவனக்குறைவால் இதுபோன்ற தொடர் விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.