நீட் தேர்விற்கு எதிர்ப்பு.. சென்னையில் திமுக மனித சங்கிலிப் போராட்டம்
நீட் தேர்வை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, திமுக சார்பில் சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
சென்னை சின்னமலையில் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்விருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தர வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
சைதாப்பேட்டை தாடண்டர் நகர் நுழைவு வாயிலில் இருந்து மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வரை திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் கைகளைக் கோர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். அனைவரும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா. சுப்பிரமணியன் தலைமையேற்று நடத்தினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சுப. வீரபாண்டியன் பேசியதாவது: நீட் தேர்வு முடிவில் 82 எஸ்சி பிரிவினருக்கும் 11 இடங்கள் எஸ்டி பிரிவினருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. 1100 இடங்களுக்கு மேல் கிடைக்க வேண்டியது நிலையில் வெறும் 93 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று சுப. வீரபாண்டியன் கூறினார்.