மு.க. ஸ்டாலின் கைதை தொடர்ந்து 3 மாவட்டங்களில் 'நீட்' மனித சங்கிலி ஒத்திவைப்பு
திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சேலம், ஈரோடு, நாமக்கல்லில் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தவிருந்த நிலையில் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டதால் 3 மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று திமுக இன்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முடிவு செய்தன. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து கொள்வதாக அறிவித்தது. சேலத்தில் இன்று மனித சங்கிலி நடத்தவிருந்தது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டதால் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடத்தவிருந்த மனித சங்கிலி ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் திருச்சி, உதகை, சென்னை, புதுவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டன.