வரதட்சணைக் கொடுமையால் மனைவி தற்கொலை.. கணவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்
சென்னை: சென்னையில் வரதட்சணை கொடுமையால் மனைவி உயிரிழந்ததால் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கும் அவரது மாமன் மகள் சங்கரேஸ்வரிக்கும் கடந்த 2007 இல் திருமணம் நடந்து. அப்போது, வரதட்சணையாக ரூபாய் 10 ஆயிரம் மற்றும் 15 சவரன் நகையை சங்கரேஸ்வரி கொண்டு வந்தார்.
நடராஜன் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தார். அவர்களுக்கு 2 வயதில் மகனும், 9 மாத மகளும் உள்ளனர். நடராஜன் குடும்பத்தினர் தங்க நகை செய்யும் வேலை செய்து வந்தனர்.
திருமணம் முடிந்தவுடன், தனியாக நகை செய்யும் தொழில் செய்யப் போகிறேன். எனவே, அதற்கு உனது பெற்றோரிடம் பணம் வாங்கி தர வேண்டும் என மனைவியிடம் கேட்டு நடராஜன் தொந்தரவு செய்துள்ளார். அதை தொடர்ந்து, சங்கரேஸ்வரியின் பெற்றோர் ரூ. 30,000 கொடுத்துள்ளனர்.
ஆனால், மீண்டும், மீண்டும் பணம் கேட்டு நடராஜன் மனைவியை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால், மனமுடைந்த சங்கரேஸ்வரி கடந்த 2011 ஏப்ரல் 11 ஆம் தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் 4 நாட்கள் கழித்து இறந்துள்ளார்.
இதையடுத்து, தனது மகளின் சாவுக்கு மருமகன் மற்றும் அவரது வீட்டினரே காரணம் என்று கூறி, சங்கரேஸ்வரியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில், நடராஜன் அவரது தாய், தந்தை மற்றும் தம்பியை கைது செய்த போலீசார் அவர்கள் மீது, சாவுக்கு காரணமாக இருத்தல், வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனா சதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், நடராஜனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். நடராஜனின் பெற்றோர் மற்றும் தம்பி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை நீதிபதி விடுதலை செய்தார்.