விவாகரத்துக்கு மறுத்த மனைவி – குத்திக் கொலை செய்த கணவர்
கோவை: கோவையில் விவாகரத்துக்கு மறுத்த மனைவியை குத்திக்கொன்ற கணவர், மனைவியின் உடலுடன் போலீசில் சரண் அடைந்தார்.
கோவை தண்ணீர் பந்தல், லட்சுமி நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கட்டட கான்ட்ராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.
இவருக்கும் சேலத்திலுள்ள குகை பகுதியை சேர்ந்த பி.காம் பட்டதாரியான ஜெயசுவாசினி என்பவருக்கும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இரட்டை குழந்தைகள்:
இந்தத் தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தை பிரசவித்த சில மாதங்களில், கனவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பெற்றோர் வீட்டில் வாசம்:
இதனால், கணவனுடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற ஜெயசுவாசினி, கடந்த நான்கு ஆண்டுகளாக சேலத்திலுள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருறார்.
விவாகரத்து கேட்டு வற்புறுத்தல்:
இதற்கிடையே, மனைவியிடமிருந்து சந்தோஷ்குமார் விவாகரத்து கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த ஜெயசுவாசினி, தான் கோவைக்கு வந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என கூறியுள்ளார்.
சித்தி வீட்டில் வாசம்:
இதற்கு சந்தோஷ்குமார் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, தனது இரு . குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்த ஜெயசுவாசினி சிங்காநல்லுாரில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கியிருந்தார்.
மாமனார் வீடு:
ஆனால், குறிப்பிட்ட படி சந்தோஷ்குமார் அழைத்து செல்ல வராததால், குழந்தைகளை சித்தியிடம் ஒப்படைத்து விட்டு, விவரமறிந்து வர வரதராஜபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
வாழ விருப்பமில்லை:
அங்கு வந்த சந்தோஷ்குமார், நம்முடைய வீட்டிற்கு சென்று நேரில் பேசிக்கொள்ளலாம் எனக்கூறி ஜெயசுவாசினியை காரில் அழைத்து சென்றார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கோவையின் பல இடங்களுக்கு காரில் சுற்றிய சந்தோஷ்குமார், எனக்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை.
ஒத்துக் கொள்ளாத மனைவி:
அதனால், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விடு என ஜெயசுவாசினியை மிரட்டியுள்ளார். இதற்கு மனைவி ஜெயசுவாசினி ஒத்துக்கொள்ளவில்லை.
கத்தியால் குத்திக் கொலை:
கடைசியாக, ஒண்டிப்புதுார் மேம்பாலத்திற்கு அடியில் காரை நிறுத்தி விட்டு இருவரும், பேசிக் கொண்டிருந்த போது, ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார், ஜெயசுவாசினியை கத்தியால் குத்திக் கொன்றார்.
போலீசாரிடம் சரண்:
பிறகு மனைவியின் சடலத்துடன் இரவு முழுவதும் காரில் சுற்றிய சந்தோஷ்குமார், நேற்று அதிகாலை சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறி சரணடைந்தார்.
200 பவுன் வரதட்சணை:
காருக்குள் இருந்த ஜெயசுவாசினியின் உடலைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சந்தோஷ் குமாரை கைது செய்தனர். திருமணத்தின் போது, ஜெயசுவாசினி வீட்டில், 200 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதனடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.