குழந்தையைத் தத்து கொடுத்துவிட்டு 3வது திருமணம் – மனைவியைக் குத்திக் கொன்ற 2வது கணவர்!
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 3 வயது குழந்தையை தத்து கொடுத்து விட்டு, 3 ஆவது திருமணம் செய்த பெண்ணை கத்தியால் குத்தியதாக அவரது 2 ஆவது கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் அமுதா. மின்சார ரயிலில் பழம் விற்பனை செய்து வருகிறார். இவரை முறைப்படி தாலி கட்டிய முதலாவது கணவர் உமாபதி. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக உமாபதியை விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா பிரிந்தார்.
அதன்பின்னர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரை அமுதா இரண்டாவதாக திருமணம் செய்தார். துரைராஜ், பழவேற்காடு காட்டுப்பள்ளி பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் எண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன் என்பவருக்கும், அமுதாவுக்கும் இடையே "கிராஸ் டாக்" ஆகி பழக்கமானது. இதையடுத்து 2 ஆவது கணவரை விட்டுவிட்டு சீனிவாசனை மூன்றாவதாக அமுதா கடந்த ஒருவாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இதனை அறிந்ததும் 2 ஆவது கணவர் துரைராஜ் நேற்று காலை அமுதாவின் வீட்டிற்கு வந்து குழந்தை எங்கே என்று கேட்டார். அப்போது குழந்தையை வேறு ஒருவரிடம் தத்து கொடுத்து விட்டதாக அமுதா கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ் காய்கறி வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து அமுதாவின் முதுகில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அமுதா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 ஆவது கணவர் துரைராஜை கைது செய்தனர்.