மனைவிக்கு தெரியாமல் எரிக்கப்பட்ட கணவர் உடல் – உறவினர்கள் சாலை மறியல்
சேலம்: சேலத்தில் மனைவிக்கு தெரியாமல் கணவரின் உடல் எரிக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகேயுள்ள கச்சுப்பள்ளி கிராமம், கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் பெருமாள். இவர் பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தையல் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள மாமுண்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகள் கலைச்செல்வி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது, கலைச்செல்வி கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில், பெருமாளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பதியர் மாமுண்டியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து வீட்டுக்கு திரும்பிய பெருமாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் அங்கு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பெருமாளின் சடலத்தை அவரது மனைவிக்கு தெரியாமல் எரித்துவிட்டதாகவும், இதுகுறித்து கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலைச்செல்வியின் உறவினர்கள் காகாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து கனககிரி கிராம நிர்வாக அலுவலர் எம்.ஜெயக்குமார் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி சிவலிங்கம், பூபதி, தங்கவேல், செல்லம்மாள், புவனேஸ்வரி உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.