6 லட்சம் கடனுக்கு 56 லட்சம் வட்டி – கந்துவட்டி கொடுமை... தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவி!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூபாய் 6 லட்சம் கடனுக்கு வட்டியாக ரூபாய் 56 லட்சம் கேட்டு மிரட்டும் கந்து வட்டிக்காரரை கண்டித்து கடன் வாங்கிய கணவனும், மனைவியும் விழுப்பரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அளித்துள்ள மனுவில், "கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பக்கத்து ஊரான கோட்டக்கரையை சேர்ந்த விஜயன் என்பவரிடம் 6 லட்சம் ரூபாயை இரண்டு பைசா வட்டிக்கு வாங்கினோம்.
மாதம் 3௦௦௦ ரூபாய் வட்டி கொடுத்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் அசலும், வட்டியுமாக 56 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்.
இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து இருவரும் திரும்பிச் சென்றனர்.