ஹைட்ரோ கார்பன் எதிர்த்து.. ஜூலை 11-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: நெடுவாசல் மக்கள் முடிவு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அடுத்த மாதம் 11ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பனை எதிர்த்து நடக்கும் நெடுவாசல் போராட்டம் குறித்து கீரமங்கலத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 75 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று கீரமங்கலத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2ம் கட்டப் போராட்டம்
இதனை எதிர்த்து நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் 2ம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 75 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. ஆனால் மத்தி மற்றும் மாநில அரசுகள் இதனை கண்டு கொள்ளவே இல்லை.
ஜெம் நிறுவனம்
இந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து ஒப்பந்தம் பெற்றுள்ள ஜெம் நிறுவனம் விவசாயிகளின் நிலம் குத்தகை ஒப்பந்தத்தை தங்கள் நிறுவன பெயருக்கு மாற்றித் தரக் கோரியுள்ளது. இதனால் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீவிரமாகும் போராட்டம்
நெடுவாசல் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் அடுத்த கட்ட வேலைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. தங்கள் போராட்டத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளாத இரண்டு அரசுகளின் கவனத்தை ஈர்க்க 75 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை பெரிய அளவில் மாற்ற கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவசர ஆலோசனை
இதுகுறித்து ஆலோசனை நடத்த நெடுவாசலை சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முற்றுகைப் போராட்டம்
இந்தக் கூட்டத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும் குழு அறிவித்துள்ளது. மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் போராட்டக்குழு முடிவெடுத்துள்ளது.