கபாலியில் 'தந்தை பெரியார்' படம் விடுபட்டதற்காக 'ஸாரி': பா. ரஞ்சித்
சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பலரது படங்கள் இடம்பெற்ற போதும் தந்தை பெரியார் படம் விடுபட்டதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தமக்கு கடவுள் நாம்பிக்கை இல்லை என்னவும் அத்திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கபாலி திரைப்படத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வசனங்களை ரஜினி மூலம் பேச வைத்திருக்கிறார் ரஞ்சித். பல இடங்களில் அம்பேத்கர், சேகுவேரா, மால்கம் எக்ஸ் என பலரது படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால் இந்த மலேசியா தமிழர்கள் சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசின் கடுமையான எதிர்ப்பை மலேசியாவுக்கு சென்றவர் தந்தை பெரியார். மலேசியாவில் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் பிரசாரம் செய்து அங்கே சாதிய கட்டுமானங்களை கலகலக்க வைத்தார்.
பெரியார் படம் இல்லை
நாடு விடுதலை அடைந்த பின்னரும் மலேசியாவுக்கு பயணித்து சாதிய கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என பிரசாரம் செய்தார். ஆனால் மலேசியா தமிழர்களை மையமாக வைத்து சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக ரஞ்சித் இயக்கிய படத்தில் அம்பேத்கர், சாப்லின், சேகுவேரா படங்கள் காட்டப்பட்டன. அந்த மக்களுக்காக உழைத்த சாதியத்துக்கு எதிராக போராடிய தந்தை பெரியார் படம் இடம்பெறவில்லையே என்ற ஆதங்கம் பெரியார் தொண்டர்களிடையே இருந்து வந்தது.
பெரியாரிஸ்டுகள் ஆதரவு
ஆனாலும் கபாலி, பெரியாரிய கொள்கைகளைப் பேசுகிறது என்பதால் பெரியாரிஸ்டுகள் ரஞ்சித்தை ஆதரித்து வருகின்றனர். இந்த நிலையில் விகடனின் மாணவர் பத்திரிகையாளர் திட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ரஞ்சித்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
பெரியார் படம் விடுபட்டதற்கு 'ஸாரி'
விகடன் மாணவர் பத்திரிகையாளர்கள் ரஞ்சித்திடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: கபாலி படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், சேகுவாரா, சார்லி சாப்ளின், மால்கம் எக்ஸ்னு பலரோட படங்கள் படம் முழுக்க இடம்பெறுது. ஆனால் பெரியார் எங்குமே இல்லையே. ஏன் பெரியாரைத் தவிர்த்துட்டீங்க?
ரஞ்சித்: பெரியார் எனக்கு ரொம்பப் பிடிச்சத் தலைவர். அவரை நான் தவிர்த்திருந்தால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது. சாதியை மற... மனிதனை நினை என்பது பெரியார் சொன்ன முக்கியமான ஸ்டேட்மென்ட். நான் பெரியாரை வேணும்னே தவிர்க்கலை. தெரியாமல் விடுபட்டிருக்கலாம். படத்தில் அவர் படம் இல்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஸாரி.
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்...
கேள்வி: ரஜினியின் மற்ற படங்கள் எல்லாமே ஆண்டவன் பாத்துப்பான், கடவுள் பார்த்துப்பான்கிற ரெஃபரன்ஸ் இருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் ஒரு கதையை எப்படி ரஜினி ஓ.கே பண்ணார்?
ரஞ்சித்: அடிப்படையில் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். இந்தக் கதையை நான் சொன்னப்போ அதில் இருக்கும் வீரியம் ரஜினி சாருக்குப் பிடிச்சிருந்தது. உடனே பண்ணலாம்ப்பானு சொல்லிட்டார்.
இவ்வாறு ரஞ்சித் கூறியுள்ளார்.