நாட்டு நலனுக்காக நான் போராடியதற்கு கைதா?... கோவையில் மாஜி நீதிபதி கர்ணன் 'பொளேர்' பேட்டி
நாட்டு நலனுக்காக போராடியதற்காக நான் கைது செய்யப்படுகிறேனா என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்க்கில் கைது செய்யப்பட்ட மாஜி நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.
கோவை: லஞ்சம் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் போராடுவதாகவும், தான் எதற்காக கைது செய்யப்படுகிறேன் என்று நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் முன்னாள் நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற இன்னாள், முன்னாள் நீதிபதிகள் மீது அவதூறு பரப்பியதால் அதுகுறித்து நேரில் விளக்க வேண்டு்ம என்று கொல்கத்தா உயர் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் அவர் நேரில் ஆஜராகவும் இல்லை, விளக்கமும் அளிக்க வில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கைதிலிருந்து விலக்களிக்க பல முறை மனு தாக்கல் செய்தும் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க
கர்ணன் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாகவே இருந்த நிலையில் நீதிபதி கர்ணன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
அவரை கைது செய்ய மேற்கு வங்க போலீஸார் தமிழக போலீஸாரின் உதவியை நாடினர். இந்நிலையில் கோவையில் மலுமிச்சம்பட்டியில் உள்ள ரிசார்டில் தங்கியிருந்த அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நான் குற்றவாளி அல்ல. என் மீதான வழக்கை விரைவில் சந்திப்பேன். லஞ்சம் வேண்டும் சுப்ரீம் கோர்ட் விரும்புகிறது. ஆனால் நானோ ஊழலை எதிர்த்து போராடி வருகிறேன்.
நீதித் துறையோ சுயலாபத்துக்காக போராடுகிறது. ஆனால் நானோ நாட்டு நலனுக்காக போராடி வருகிறேன். என்னை ஏன் கைது செய்தனர் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் அவர்.