அரசியலுக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை - மு.க. அழகிரி
அரசியலுக்கு நான் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: அரசியலுக்கு வருவேன் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை எம்.சி.சி. மேல் நிலைப்பள்ளியில் 1967-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பேசுகையில், என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடக்கும் என நான் நினைத்ததே இல்லை. எனது வாழ்வில் அரசியல் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பல அதிர்ச்சிகளை சந்தித்திருக்கிறேன்.
அவற்றையெல்லாம் கடந்து இன்று உங்கள் முன்னாள் நிற்பதற்கு இங்கு அமர்ந்திருக்கும் எனது ஆசிரியர்களே காரணம். இன்று நீங்கள் கொடுத்திருக்கும் இன்ப அதிர்ச்சி இனி எனக்கு மீண்டும் எப்போது கிடைக்கும்?. இதை யாராலும் தர முடியாது. கபாலி பட வசனத்தில் சொல்ல வேண்டுமானால் இந்த கணம் -மகிழ்ச்சி-.
நமது தாய், தந்தை நம்மை ஆளாக்கியிருக்கலாம். ஆனால் நாம் எங்கிருந்து வந்தோம் யாரால் பயிற்றுவிக்கப்பட்டோம் என்பதை மறக்கவே கூடாது. நான் மத்திய அமைச்சராகி முதல் கையெழுத்துபோடும் போது எனது பள்ளியின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தேன் என்றார் அழகிரி.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்பட பல வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் உள்பட 250 பேர் கலந்துகொண்டனர்.