எனக்கு திருமணம் நடந்ததா யாருங்க சொன்னா.. ஈஷா மீதான புகாரை அதிரடியாக மறுக்கிறார் ஐ.டி பெண் ஊழியர்
கோவை: தனக்கு திருமணமே இன்னும் நடக்கவில்லை என்றும், ஈஷா யோகா மையத்திற்கு எதிராக சிலர் செய்த சதி. எனது பெற்றோரை மூளைச்சலவை செய்து அவ்வாறு கூறவைத்துள்ளதாக இளம்பெண் அபர்ணா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தண்டபாணி, வசந்தா தம்பதியினர். இவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த தங்களது இரண்டாவது மகள் அபர்ணா, யோகா பயிற்சிக்கு சென்ற போது மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் உள்ள திருமண மையத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்டார் எனவும் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது என ஈஷா திருமண மையத்தினர் கூறியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டி இருந்தனர்.
இது குறித்து வசந்தா தற்போது விளக்கம் அளித்துள்ளதாவது: "முன்னதாக பேராசிரியர் காமராஜ், மற்றும் சிவா ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது, காமராஜ் அவர்களது பெண்கள் குறித்து எங்களிடம் கூறினார். ஈஷா யோகா மையத்திற்கு சென்ற தனது மகள்களை ஈஷா மையத்தினர் மூளை சலவை செய்து சன்னியாசிகளாக மாற்றிவிட்டனர்.
இதேபோல, ஈஷா மையத்திற்கு உங்கள் மகளை அனுப்பினால், உங்கள் மகளையும் சன்னியாசியாக மாற்றிவிடுவார்கள் என்று எங்களிடம் கூறினார்கள். பின்னர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும், எங்களுடன் நீங்களும் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, நாங்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து, மனு கொடுக்க வருகிறோம் என கூறினோம். கலெக்டர் ஆபிஸ் சென்றோம். ஆனால், காமராஜ் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லாமல், எங்களை வேறொரு கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு உலக மகளிர் அமைப்பு என்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மீடியாவில் பேசவேண்டும் என்பது குறித்து அவர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. பின்னர், அங்கு வந்த மீடியாவில் அவர்கள் கூறியபடி நானும் கூறிவிட்டேன். மீடியா வருகிறது என எங்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் எங்களை முட்டாள் ஆக்கிவிட்டனர். அதற்கு பின்பாக இதுவரை எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
இது குறித்து அபர்ணா கூறியதாவது: இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. எனக்கு இன்னும் திருமணமே நடைபெறாத நிலையில், ஊடகங்களில் எனக்கு திருமணம் நடந்தது என தகவல் வெளியிட்டுள்ளன. நான் ஐ.டி. கம்பெனியில் பணி செய்து கொண்டே எனது பெற்றோரை கவனித்து வருகிறேன்.
இது போன்ற குற்றச்சாட்டை ஈஷா மையத்தின் மீது செலுத்த எனது பெற்றோர்களுக்கு காமராஜ் மற்றும் சிவா ஆகியோர் அழுத்தம் கொடுத்தனர். இதனால், தற்போது என்னால் வெளியிலேயே தலைகாட்ட முடியவில்லை. எங்களையும், உறவினர்களையும் மூளைச்சலவை செய்கின்றனர். இதனால், எனது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது" என்று தெரிவித்தார்.