ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் கருவிகளை நானே உடைப்பேன்... வைகோ ஆவேசம்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிடுவதே நான்தான் என்றும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பொருள்களை உடைக்கவும் செய்வேன் என்றும் மதிமுக தலைவர் வைகோ தெரிவித்தார்.
கும்பகோணம்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தை நான்தான் தூண்டி விடுகிறேன், முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என்று ஆவேசத்துடன் வைகோ தெரிவித்தார்.
கடந்த மாதம் இறுதியில் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் ஓஎன்ஜிசியை வெளியேற்றக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒட்டி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் போராட்டத்தை யாரேனும் தூண்டிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இது குறித்து கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தை தூண்டுவது நான்தான். என் மீது ஓஎன்ஜிசி வழக்கு தொடரட்டும். தேவைப்பட்டால் அந்த நிறுவனத்தின் கருவிகளையும் உடைக்க ஏற்பாடு செய்வேன் என ஆவேசமாக கூறினார்.
முன்னதாக சோழ மன்னர்கள் கட்டிய தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்று கட்டிட மற்றும் சிற்பக் கலையை வைகோ பார்வையிட்டார்.