சரத்குமார் மீதான புகாருக்கு ஆதாரம் உள்ளது.. மானநஷ்ட வழக்கு பற்றி விஷால் அதிரடி பேட்டி
மதுரை: சரத்குமார் மீது ஆதாரமில்லாமல் புகார் தெரிவிக்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷாலுக்கு எதிராக சரத்குமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால் இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் அளித்த பேட்டி: தேர்தலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, எதிர்கோஷ்டியினருடன் பேச்சு வார்த்தை நடத்த சரத்குமார் அணி அழைப்புவிடுக்கிறது. ஆனால் தேர்தல் நடந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சரத்குமாருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றதைபோல நடிகர் சங்கத்திலும் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு ஏன் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போடுகிறது?
நடிகர் சங்கம் குறித்து நான் கூறிய புகார்களை எதிர்த்து என்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நான் கூறவில்லை. ஜட்ஜ் ஐயாவே கூறியுள்ளார். 'நடிகர் சங்கத்தில் எதுவும் சரியில்லை' என்று நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
எனவே, சரத்குமாருக்கும், எனக்கும் இதில் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. சங்க கட்டிடத்தை இடிக்க அனுமதி பெறாமலேயே, அவசரமாக இடிக்கப்பட்டுள்ளனர். 5 வருடங்களாக வருமான வரியை கட்டவில்லை. இதற்கெல்லாம் ஆதாரம் உள்ளதால்தான் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகிறோம். இவ்வாறு விஷால் மற்றும் அவரது அணியினர் தெரிவித்தனர்.