என் உறவினர்கள் சிலருக்கு தான் மதுபான ஆலைகளில் பங்குகள் உள்ளது: டி.ஆர்.பாலு
சென்னை: திமுகவினர் மதுபான ஆலைகள் நடத்துவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
தமிழகத்தில் பூரண மது விலக்குக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுகவினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
சில நாளிதழ்களிலும், திமுக முக்கிய புள்ளிகள், கருணாநிதியின் வாரிசுகள் மதுபான ஆலைகள் நடத்துவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த முக்கிய புள்ளிகளில் ஒருவர் டி.ஆர்.பாலு என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், டி.ஆர்.பாலு இன்று, கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மதுபான ஆலைகளை திமுகவினர் நடத்துவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. மதுபானக்கடை லைசென்சுகளும் திமுக நிர்வாகிகளிடம் கிடையாது.
எங்களுடைய உறவினர்கள் சிலருக்கு மதுபான ஆலைகளில் பங்குகள் உள்ளது உண்மை. தமிழகத்தில் பூரண மது விலக்கு அமலுக்கு வந்தால், அந்த பங்குகளை திருப்பித்தர தயாராக உள்ளோம். இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இருதினங்கள் முன்பு திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் இதே கேள்வியை நிருபர்கள் கேட்டதற்கு "மதுவிலக்கு அமலுக்கு வந்தால், தானாக திமுகவினர் நடத்தும் ஆலைகளும் மூடப்படும். விமர்சனம் செய்வோருக்கு இந்த 'காமன் சென்ஸ்' கூட கிடையாதா" என்று பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.