மக்கள், தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத்தான்!- ஓபிஎஸ் நம்பிக்கை
சென்னை: மக்கள், தொண்டர்களின் 100 சதவீத ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. விரைவில் புதிய ஆட்சி ஏற்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரண்டாவது அணிக்கு தலைவராக உள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா பிறந்த நாளன்று நானும் ஜெ தீபாவும் ஒரே மேடையில் பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் எனக்கு ஆதரவு அளிக்க நிச்சயமாக முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.
உண்மையான அ.தி.மு.க.வை நிர்ணயிப்பது அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்களும், மக்களும்தான். அவர்களிடம் (சசிகலா அணி) வேண்டுமானால் எம்.எல்.ஏ.க்கள் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், மக்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
எம்.ஜி.ஆர். மறைந்த போது ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று 2 அணிகள் இருந்தது. இதில் ஜெயலலிதாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை. ஆனால் தொண்டர்கள், மக்களின் ஆதரவு முழுமையாக இருந்தது. அதேபோல தான் எங்களிடமும் இப்போது எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லையென்றாலும் அம்மாவின் (ஜெயலலிதா) தொண்டர்களின் முழு ஆதரவும் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் எனக்கு பரிபூரண ஆதரவை செல்போனிலும், நேரிலும் வந்து தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதா மீது மக்கள் வைத்த நம்பிக்கையை, அவருடைய உண்மை தொண்டனாகிய என் மீது வைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், பொறுப்பையும் கொடுத்து இருக்கிறது. அதற்கேற்றாற்போல் என்னுடைய எதிர்கால அரசியல் பயணமும், மக்கள் சேவையும் இருக்கும்," என்றார் பன்னீர் செல்வம்.