நான் ஏன் எடப்பாடி அணியில் இணைந்தேன் தெரியுமா? ஆறுக்குட்டி எம்எல்ஏ அடடே விளக்கம்
தொகுதி மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஓபிஎஸ் அணியிலிருந்து ஈபிஎஸ் அணிக்கு தான் மாறியதாக கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி கூறியிருக்கிறார்.
சேலம் : தனது தொகுதி மக்களின் நலனுக்காக அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஓபிஎஸ் அணியிலிருந்து, எடப்படியார் அணிக்கு மாறியதாக, கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து இப்போது, ஓபிஎஸ் அணியாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்த கோவை - கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
வேறு அணிக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரிய அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஓபிஎஸ் அணியில் பெரிய அளவுக்கு விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த அணியில் முதல் ஆளாக இணைந்த எம்எல்ஏ ஆறுக்குட்டி குறுகிய காலத்திலேயே பெரும் அதிருப்தியதோடு ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேற விரும்பியது குறிப்பிடத்தக்கது.
இணைந்த ஆறுக்குட்டி
இந்நிலையில், சேலத்தில் இன்று காலை முதல்வர் பழனிச்சாமியை, அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்த ஆறுக்குட்டி, முறைப்படி அவரின் அணியில் இணைந்துள்ளார். இதற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு மாறி வந்த நிலையில், முதல் ஆளாக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஒருவர், எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
ஓபிஎஸ் எண்ணிக்கை
முதல் ஆளாக ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியதை அடுத்து, தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.
முதல்வர் அன்பு
எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், " ஓபிஎஸ் அணியின் சார்பில் நடத்தப்பட்ட கோவை செயல்வீரர் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. என்னை அழைக்காமலேயே அங்கு பூஜையையும் செய்தனர். ஆனால், நான் எந்த அணியில் இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது முன்வைத்த எனது தொகுதி கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார்.
மக்களுக்கு தேவை
சட்டசபை கூட்டத் தொடரின் போது கவுண்டம்பாளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற நிதி ஒதுக்கி அறிவித்துள்ளார். இதனையடுத்து மக்களை சந்தித்த போது, தொகுதிக்கு தேவையான பயன்கள் கிடைக்க வேண்டுமென்றால் ஆளும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து இருக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
அழைக்காமலே சேர்ந்தேன்
மக்கள் விருப்பத்தின் பேரிலேயே அணி மாறி உள்ளேன். திருமாவளவன் கூட எடப்பாடி பழனிசாமி அரசை பாராட்டி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணியில் என்னை யாரும் அழைக்கவில்லை. நானாக முடிவு செய்து தான், இந்த அணிக்கு வந்தேன்.
மிரட்டவில்லை
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தொகுதி மக்களுக்காகவே அணி மாறினேன். என்னை யாரும் மிரட்டவில்லை. யார் மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். யாரையும் விமர்சிக்கவும் நான் விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.