ஆர்வத்தால் தமிழ் கற்று வருகிறேன்... தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நெகிழ்ச்சி
தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் அதைக் கற்று வருகிறேன் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மதுரை: 'தமிழ் மீதான ஆர்வத்தால், அதைக் கற்று வருகிறேன். அடுத்த சந்திப்பில் நிச்சயம் தமிழில் பேச முயற்சிப்பேன்' என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
இந்திரா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றபின், முதன்முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நேற்று சென்றார்.
அப்போது அவரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் மதுரை வழக்கறிஞர் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர்.
தமிழ் மீது ஆர்வம்
பின்னர், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசுகையில், " தமிழ் பழமையான, பாரம்பரியமிக்க, வரலாற்று சிறப்பு மிக்க மொழி. தமிழ் மீது உள்ள ஆர்வத்தால், அதைக் கற்று வருகிறேன். அடுத்த சந்திப்பில் தமிழில் பேச முயற்சிப்பேன். ஏற்கெனவே பலமுறை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளேன்.
முன் மாதிரி தீர்ப்புகள்
தமிழ் மக்களின் விருந்தோம்பல் பண்பு, கலாசாரம் எனக்குப் பிடித்துள்ளது. அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் பல முன்மாதிரியான தீர்ப்புகளை அளித்துள்ளது.
வழக்கறிஞர்களின் பங்களிப்பு
நீதி பரிபாலனத்தில் நீதிபதிகளுக்கு இணையாக, வழக்கறிஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சட்டத்தின் நடைமுறைகள் மேம்பட வழக்கறிஞர்களின் பங்களிப்பு மேலும் தொடர வேண்டும்" என்று தெரிவித்தார்.
சிறப்பு வரவேற்பு
இந்த வரவேற்பு விழாவில் நிர்வாக நீதிபதி ஏ.செல்வம் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மேலும் நீதிமன்ற அலுவலர்களும் பங்கேற்று சிறப்பு செய்தனர்.