தமிழகம் உள்பட 3 மாநிலங்களில்... பான் மசாலா, குட்கா தயாரிப்பாளர் வீடுகளில் அதிரடி "ஐடி" ரெய்டு!
சென்னை: தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களில் பான் மசாலா, குட்கா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனையாளர்கள், தரகர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம், ஆந்திரா தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ. 100 கோடிவரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா என ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கோதனை நடத்தப்பட்டது. அப்போது பல கடைகளில் சட்ட விரோதமாக பான்மசாலா, குட்கா ஆகியவை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ரூ.65 லட்சம் பறிமுதல்
செங்குன்றம் பகுதிகளில் பான் மசாலா குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் பணத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா, ஆந்திரா குடோன்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.