தற்கொலை செய்ய கடலுக்குப் போனபோது என்னை 4 பேர் சீரழித்தனர்: ஆசிரம பெண்
புதுச்சேரி: தற்கொலை செய்ய கடலில் குதிக்க செல்கையில் தன்னை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நானும், எனது சகோதரிகளும் கடந்த 14 ஆண்டுகளாக அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் வசித்து வந்தோம். அப்போது எங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்தார்கள். அதனால் நாங்கள் 5 பேரும் ஆசிரம நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் கூட நடத்தினோம். இது தவிர ஆசிரமத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் பற்றி நாங்கள் போலீசில் புகார் அளித்தும் பலனில்லை.
இந்நிலையில் குடியிருப்பில் இருந்து எங்களை வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் முயற்சி செய்தது. நாங்கள் வெளியேற மறுத்தோம். போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே நாங்கள் குடியிருப்பை காலி செய்துவிட்டு எங்கள் பெற்றோர் இருக்கும் வீட்டுக்கு சென்றோம்.
பெற்றோரின் வீட்டை அடைந்த பிறகு எங்கு செல்வது என தெரியவில்லை. இதையடுத்து தான் தற்கொலை செய்ய நாங்கள் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றோம். அங்கு என்னை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்து கொள்ள நான் தயார் என்றார்.
ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பீகாரைச் சேர்ந்த 5 சகோதரிகள் தங்கள் பெற்றோருடன் கடலில் குதித்தனர். அதில் 2 சகோதரிகள் மற்றும் அவர்களின் தாய் பலியாகிவிட்டனர். 3 சகோதரிகள் மற்றும் தந்தை மீட்கப்பட்டனர்.