எடப்பாடியை சந்தித்தார் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஆறுகுட்டி எம்.எல்.ஏ
கோவை: ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ள எம்.எல்.ஏ ஆறுகுட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இது தொடர்பான தகவல்களுக்கு ஆறுகுட்டி எம்எல்ஏ மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் தரப்பு தன்னை புறக்கணிப்பதால், அதிருப்தி இருந்ததாகவும், அதனால் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தொகுதி மக்களையும் தொண்டர்களையும் சந்தித்த பின்னர் முடிவெடுப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் இன்று திருப்பூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஆறுகுட்டி சந்தித்து பேசினார்.
முன்னதாக, கோவை மாங்கரை பகுதியில் தன் தொகுதிக்குட்பட்ட மக்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி, அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும். பெரும்பாலான மக்கள் ஓபி எஸ் அணியிலிருந்து விலகியதை வரவேற்கிறார்கள்.
எனவே தொகுதி மக்களின் நலனை கருதி நான் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகினேன். இதுகுறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தினர். இன்று காலை வாக்கிங் சென்றபோது தொகுதி மக்கள் சிலர் என்னை சந்தித்து நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் தொகுதி முழுவதும் சுற்றுபயணம் செய்து நல்ல முடிவை அறிவிப்பேன்.
மேலும் எடப்பாடி அணியில் சேருவது குறித்து இன்னும் 2 நாளில் முடிவை அறிவிப்பேன். பொறுத்திருந்து பாருங்கள், நல்ல முடிவு கிடைக்கும். அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய முடியும் என்றார்.