யாருக்கு ஆதரவு என்பதை இன்று அறிவிப்பேன் - மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி
எனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பேன் என மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமும் அன்சாரி தமது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் இருக்கப் போகிறார்கள் என்ற சூழ்நிலையில் சசிகலாவின் பக்கமே அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இதனிடையே நேற்று 5 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் அருகே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 135 பேரில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்கள் மூன்று பேர். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி. இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் அவர்களும் அ.தி.மு,க சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
இவர்களில் கருணாஸ், தனியரசு இருவரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். இந்நிலையில் தமிமுன் அன்சாரி ஆதரவு யாருக்கு என்பது தெரியாத சூழல் நிலவிய நிலையில், தனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.