டுவிட்டரில் இன்று காலை உரையாடவுள்ளேன்...வாங்க பேசலாம் - விஜயகாந்த்
சென்னை: இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை பொது மக்களின் கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் பதிலளிக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளே நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்களின் உரையை கேட்க தொண்டர்களும் அசராமல் காத்திருக்கின்றனர்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் சீமான் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, தாமாகா வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சி தலைவர்களும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை டுவிட்டரில் பொது மக்களுடன் உரையாட உள்ளார். அதற்காக பொது மக்கள் தங்கள் கேள்விகளை விஜயகாந்தின் டுவிட்டருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும், பதிவிடும் கருத்துக்களுக்கும் விஜயகாந்தே பதிலளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
வணக்கம்,
— Vijayakant (@iVijayakant) April 30, 2016
நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன்.
வாங்க பேசலாம். #Tweet2Vijayakant