ஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் வந்தாலும் தினகரன்தான் வேட்பாளராம்... ஃபெரா கேஸ்ல உள்ளே போனால்?
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வேட்பாளர் என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஃபெரா வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்து அவர் சிறைக்குப் போனால் எப்படி போட்டியிடுவார் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வரலாறு காணாத பணப்பட்டுவாடாவினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த ஆவணங்களில் ரூ. 89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக பட்டியல் கிடைத்தது. இதுவே தேர்தல் ரத்தாக காரணமாக அமைந்தது.
எனினும் தேர்தல் ரத்துக்கு பலரும் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகின்றனர். பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் ஏன் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
டிடிவி தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று சென்ற டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மாவின் வேட்பாளர் நான் தான் என்றார்.
எதையும் சந்திப்பேன்
தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், இவர்களால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் தான் சென்றாக வேண்டும். எது வந்தாலும் அதனை சந்திப்பேன்.
நான்தான் வேட்பாளர்
எப்போது ஆர்.கே.நகர் தேர்தல் நடந்தாலும் நான் தான் அம்மாவின் வேட்பாளர். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதாலே அவர் ஆர்.கே. நகரை சுற்றி வருகிறார்.
விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து விட்டார் என்றும் அவர் மாற்றப்படலாம் என்று செய்தி பரவுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அது வதந்தி என்று கூறினார். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்றார்.
பொதுத்தேர்தல்
விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரோ கேட்டதற்கு அவர் எப்போது ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்? என்று கேட்டார் டிடிவி தினகரன்.