ஜெ.வின் எக்மோ கருவி அகற்றுவது பற்றி என்னிடம் எதுவுமே சொல்லலை... ஒரே போடு போட்ட ஓபிஎஸ்!
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவது குறித்து தமக்கு தெரிவித்ததாக உண்மைக்குப் புறம்பாக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்குப் பொருத்தப்பட்டிருந்த எக்மோ கருவி எடுப்பது குறித்து தம்மிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவ்வாறு சொல்லப்பட்டதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார். அதை வாபஸ் வாங்கவில்லை என்றால் அவர் மீது வழக்குத் தொடுப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை 5 மணி வரை போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தை நிறைவு செய்யும்போது ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது, ''ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு அவர் தீவீர சிகிச்சையில் இருந்தார். ஆனால், அந்த கருவி அகற்றப்படுவது குறித்து என்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. சுகாதார செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனக்கு எக்மோ கருவி அகற்றப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவர் அந்த தகவலை வாபஸ் பெறவில்லை என்றால் அவர் மீது வழக்குத் தொடுப்பேன்'' என ஆக்ரோஷமாகக் கூறினார்.
அத்துடன் மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார் என தகவல் வந்தது. ஆனால் இரவு 11 மணியளவில்தான் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஜெயலலிதா உத்தரவிட்டதால், நான் சசிகலாவுடன் 2012லிருந்து பேசுவது இல்லை எனவும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.