எந்த பதவிக்கு வராமலேயே அதிமுகவை காப்பேன் - சசிகலா கணவர் நடராஜன்
அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன். ஆனால் பதவிக்கு வராமலேயே அதிமுக என்னும் இயக்கத்தை பாதுகாப்பேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற விழதவில் சசிகலாவின் கணவர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன் என்று கூறினார்.
அதிமுகவின் சூத்திரதாரி, நிழல் தலைவர், சசிகலாவை திரைமறைவில் இருந்து ஆட்டிவைப்பது நடராஜன்தான் என்றெல்லாம் பேசப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவை காக்க வந்த ஆபத்பாந்தவன் தான்தான் என்பது போல பகிரங்கமாகவே மேடைகளில் பேசி வருகிறார் நடராஜன்.
நடராஜன் பேச்சு
பொங்கல் விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. குடும்ப ஆட்சிதான் நடத்துவோம் என்றும் கூறினார். இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இன்று ஜெயலலிதா பிறந்தநாளில் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் புகழ்
நடராஜன் தனது பேச்சில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
பதவிக்கு வரமாட்டேன்
பலரும் கூறுவது போல நான் அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன். ஆனால் பதவிக்கு வராமலேயே அதிமுக என்னும் இயக்கத்தை பாதுகாப்பேன் என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலின் பற்றி கிண்டல்
திமுகவின் செயல் தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் இப்போது செயல்படாத தலைவராக ஆகி விட்டார் என்றும் நடராஜன் கூறி பரபரப்பை தீயை பற்றவைத்துள்ளார்.