நான் தமிழன், அதிமுகவில் சேர மாட்டேன்.. அடித்துச் சொல்கிறார் வாகை சந்திரசேகர்
சென்னை: நான் தமிழன். தமிழன் என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேனோ அதே பெருமை திமுககாரன் என்று சொல்வதிலும் எனக்கு உள்ளது. நான் அதிமுகவில் ஒருபோதும் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகரும், திமுக மேடைப் பேச்சாளராக பல காலமாக வலம் வருபவருமான வாகை சந்திரசேகர்.
பாலைவனச் சோலையில் தொடங்கி பல படங்களில் அருமையான நடிப்பைக் கொடுத்தவர் சந்திரசேகர். திமுகவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.
திமுகவிலிருந்து எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சரத்குமார் என பல நடிகர்கள் வெளியேறிய போதெல்லாம் சந்திரசேகர் மட்டும் வெளியேறாமல் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து வருகிறார்.
இவருக்கு திமுக 1999ம் ஆண்டு திண்டுக்கல் எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார். தற்போது அவர் திமுகவிலிருந்து அதிமுகவில் சேர முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.
இதை சந்திரசேகர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
உண்மை இல்லை
நான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. தி.மு.க.வை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்.
நான் தமிழன்
நான் தி.மு.க.வில் ஒரு அங்கம். தமிழன் என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேனோ அதே பெருமை தி.மு.க.காரன் என்பதிலும் எனக்கு கிடைக்கிறது.
யாரும் நம்ப மாட்டார்கள்
தி.மு.க.தான் எனக்கு அடையாளம். எனவே நான் இந்த கட்சியில் இருந்து விலகப் போகிறேன் என்ற செய்தியை யாரும் நம்ப மாட்டார்கள்.
கலைஞர் விசாரித்தார்.. தளபதி வக்கீல் கொடுத்தார்
என் மீது வழக்கு போடப்பட்டபோது தலைவர் கலைஞர் விசாரித்தார். தளபதி ஸ்டாலின் வக்கீல் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
குடும்பத்தில் ஒருவன்
நான் கட்சிகாரன் என்பதையும் தாண்டி கலைஞரின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறேன். தி.மு.க.வுக்கு என்னால் சிறிய இழுக்கு ஏற்படுவதை கூட தாங்கிக் கொள்ள மாட்டேன்.
அது வேற.. இது வேற
நடிகர் சங்கத்தில் அரசியல் இல்லை. தலைவராக இருக்கும் சரத்குமார் ஒரு கட்சியில் இருக்கிறார். பொதுச்செயலாளராக இருக்கும் ராதாரவியும், நானும் வேறு வேறு கட்சியில் இருக்கிறோம். கட்சிக்கு எந்த இழுக்கும் ஏற்படாத வண்ணம்தான் நடிகர் சங்க பணியை செய்து கொண்டு இருக்கிறோம்.
அட்ரஸே இவர்கள்தான்
தி.மு.க. என்பது தலைவர் கலைஞர்தான். தளபதி ஸ்டாலின் சகோதரராக இருக்கிறார். என் முகவரி இவர்கள் இருவரும்தான் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.