நான் ராஜினாமா செய்ய முடியாது... சசிகலா என்னை டிஸ்மிஸ் செய்யட்ட்டும்... சொல்வது தினகரன்!
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று தினகரன் உறுதியாக கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தம்மை நீக்கட்டும் என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து தினகரன் குடும்பம் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணி என்றும் ஓபிஎஸ் அணி என்றும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அம்மா கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
களங்கம்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது: கட்சியில் இருந்து என்னை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. நானும் என்னால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒதுங்கியே இருக்கிறேன்.
ராஜினாமா
கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதால் நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இந்தப் பதவி சிறையில் இருக்கும் பொதுச் செயலாளர் சசிகலாவால் கொடுக்கப்பட்டது. அவர்கள் என்னை நீக்கட்டும். அதுவரை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்.
அடுத்து என்ன?
இப்போது என்னை ஒதுக்கி வைத்தவர்களின் ஒப்புதலோடுதான் என்னை துணைப் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுத்தார். அதனால், என்னுடைய வழக்கு விசாரணை எல்லாம் முடிந்த பின்னர் பெங்களூரு சென்று சசிகலாவை பார்க்க உள்ளேன். பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி சொல்ல முடியும்.
பொறுப்புணர்ச்சி
கட்சியின் நலனுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். என்ன நடந்தாலும் எங்கும் போக மாட்டேன். கட்சியில் இருப்பவர்கள் கட்சியையும் ஆட்சியையும் பொறுப்போடு நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தினகரன் கூறினார்.