எனக்குதான் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது: தீபா கணவர் மாதவன் பொளேர் பேட்டி
தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள தீபா கணவர் மாதவன் தனக்கு தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேரவை நடத்துவதாகவும், தாம் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் தீபா கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவையை அண்மையில் தொடங்கினார். பேரவை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. அந்தக் கட்சியில் நடைபெற்றுவரும் திடீர் குழப்பங்களாலும், அறிவிப்புகளாலும் தொண்டர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே, தீபாவுக்கும் அவரது கணவரான மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், மாதவன் அதனாலேயே மாதவன், கட்சிப் பணியைக் கவனிக்க மறுக்கிறார் எனவும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தீபா கணவர் மாதவன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இன்று இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து ஆஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாதவன், எனக்கு தீபாவுக்கு எந்தக் கருத்து வேறுபாடு இல்லை. தீபா நடத்துவது பேரவை என்றும் நான் தனிக்கட்சி தொடங்கு உள்ளதாகவும் கூறினார். தனிக்கட்சியை ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதாக கூறிய மாதவன், தீபாவை சுற்றி தீய சக்திகள் உள்ளதாகவும், நான் கட்சி தொடங்குவது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனக்குத்தான் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் முழுசா கட்சி பெயரை கூட அறிவிக்கவில்லை அதற்குள் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்கிறாரே. அது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.