ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாதவர்.. வைகைசெல்வன் கடும் தாக்கு
ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாதவர் என்று வைகை செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: என் மீது அவதூறு பரப்பியதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர்
வைகைசெல்வன் கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வனுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
வைகைச் செல்வனை, ரூ500க்கு பேசும் கூலிப் பேச்சாளர் என சாடியிருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் வைகைச் செல்வன். அதில், சினிமா போஸ்டர் ஒட்டுவதற்காக தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் வலம் வந்தவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, வைகை செல்வன் ஒரு அழுகிய தக்காளி, அது சாப்பிடவும் உதவாது, சாம்பாருக்கும் உதவாது என்று காட்டமாக கூறினார்.
இந்நிலையில் தம் மீது அவதூறு பரப்பியதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக வைகை செல்வன் கூறியுள்ளார். மேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொறுப்புடன் செயல்பட வேண்டும். தனியார் பாலில் கலப்படம் இருப்பது உண்மை என்றால் அதை நிரூபிக்க வேண்டியது அமைச்சரின் பொறுப்பு.
இருவருக்கும் இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.