நான் வீட்டுல இருந்துகிட்டே ஆர்கே நகரில் அசால்ட்டா ஜெயிப்பேன் பாரு... ரேஞ்சுக்கு பேசும் 'மேட்' தீபா!
தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நானே வெற்றி பெறுவேன் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொருளாளர் தீபா கூறினார். ஆர்.கே. நகரில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுவை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாதான் காரணம். அவர் என் மீது வைத்திருந்த அன்பு காரணமாகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
அதே போன்று ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் நல்ல முடிவை எனக்கு நிச்சயம் அளிப்பார்கள். அப்போது ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார் என்பதை தமிழக மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் அவர்கள் நிருபிப்பார்கள்.
நானே அதிமுக
நிச்சயமாக இந்த தேர்தலின் வெற்றி ஒரு சரித்திரமாக என்னுடைய வாழ்க்கையில் அமையும் என்று நம்புகிறேன். அதிமுகவிற்கு ஒரு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அது நான்தான் என்பதில் ஒன்னரை கோடி தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நிச்சயமாக இந்த தேர்தலின் முடிவில் அதிமுகவின் தலைமையை நான் ஏற்று வழி நடத்துவேன்.
விரைவில் பிரச்சாரம்
ஆர்.கே. நகரில் விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். ஆர்.கே. நகரின் பிரச்சனைகள் என்னென்ன என்று முழுமையாக தெரியும். இந்தத் தொகுதி மக்கள் கடந்த 3 மாதங்களாக என்னை சந்தித்து வருகிறார்கள். அதேபோன்று முதன் முதல் என் வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களிடம் பலமுறை பேசியிருக்கிறேன். அவர்களுக்கு என்ன தேவை என அனைத்தும் எனக்குத் தெரியும்.
வெற்றி பெற்றால்..
ஜெயலலிதா என்னென்ன வாக்குறுதிகளை அளித்தார்களோ அவை அனைத்தையும் நான் நிச்சயமாக முன்னின்று நிறைவேற்றுவேன். வெற்றி வாய்ப்பை ஆர்.கே. நகர் மக்கள் எனக்கு அளித்தால் அவர்களுக்கான நான் நிச்சயம் பாடுபடுவேன்.
சின்னம் எது?
தேர்தல் ஆணையம் என்ன சின்னத்தை எனக்கு அளித்தாலும் நான் அதில் போட்டியிடுவேன். 3 சின்னங்களை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறேன். அதில் இருந்து அவர்கள் என்ன ஒதுக்கி தருகிறார்களோ அதில் நான் போட்டியிடுவேன்.
தினகரன் சதி
ஒன்னரை மணி நேரம் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் என்னை காத்திருக்க வைத்தார்கள். எனக்கு வழங்கி இருந்த நேரத்திலேயே டிடிவி தினகரனும் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். எனக்கு எதிராகவே அவர் திட்டமிட்டு இந்த செயலை செய்திருக்கிறார் என்று தீபா கூறினார்.