எம்ஜிஆரின் தொண்டன்.. நிச்சயம் வெற்றி எனக்குத்தான்.. ஒன்இந்தியாவிற்கு மதுசூதனன் மனம் திறந்த பேட்டி
எம்ஜிஆரின் தொண்டன் நான் என்பதால் நிச்சயம் வெற்றி எனக்குத்தான் என்று ஓபிஎஸ் அணியின் ஆர்.கே. நகர் வேட்பாளர் மதுசூதனன் ஒன்இந்தியாவிடம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரண்டு அணிகளில் ஒன்றான ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து காலியான ஆர்.கே. நகர் தொகுதியை கைப்பற்ற ஓபிஎஸ் அணியினரும் சசிகலா அணியினரும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை இலை சின்னமே யாருக்கு கிடைக்கும் என்ற போட்டி நிலவி வரும் நிலையில், தங்களுக்கான வேட்பாளர்களை இரு அணியினரும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே. நகரின் மைந்தன் என்றும் அந்தத் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அதிமுகவின் மூத்த தலைவருமான மசூசுதனன் ஒன்இந்தியாவிடம் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
எனக்கே வெற்றி
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பதவியில் உள்ளேன். ஜெயலலிதாவிற்கு முன்மே ஆர்.கே. நகரின் வேட்பாளர் நான்தான். ஆர்.கே. நகர் தொகுதியில் எனக்குத்தான் செல்வாக்கு உண்டு. 90 சதவீத வாக்குகள் எனக்கே கிடைக்கும்.
மக்களோடு மக்களாக..
இந்த தொகுதியில் உள்ள மக்களோடு மக்களாக நின்று பழக்கப்பட்டவன் நான். கொருக்குப்பேட்டை பகுதி முழுவதும் காலையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சுற்றி வந்தேன். எனக்கு முழு ஆதரவு உள்ளது அதாவது 90 சதவீத ஆதரவு இருக்கிறது. மீதி 10 சதவீதம்தான். அதுவும் அவர்களோடு பேசிப் பார்த்தால் உறுதியான வெற்றியை பெற்றுவிடுவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எம்ஜிஆரின் ரசிகன்
மாலையில் இந்த பகுதிகளை எல்லாம் படிப்படியாக பார்க்க உள்ளேன். அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறேன். அதனைத் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரம் செய்ய உள்ளேன். எனக்கு உறுதியான வெற்றி காத்திருக்கிறது. காரணம் நான் அம்மாவின் விசுவாசி. புரட்சித் தலைவருடைய தொண்டன். புரட்சித் தலைவருடைய ரசிகன். ஆகையால்தான் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
எம்ஜிஆருக்காக சிறை
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளில் நாங்கள் சிறையில் இருந்தவர்கள். அண்ணா காலத்திலும் நான் எம்ஜிஆரின் ரசிகனாகத்தான் இருந்தேன். எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கிய உடன் எதிர்த்து போராடி சிறைக்குச் சென்றேன். சிறையில் வந்த பின்னர் எம்ஜிஆரை சந்தித்து எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
மாற்று வேட்பாளர்
ஜெயலலிதா 2015ல் இந்த தொகுதியில் நின்ற போதும், என்னைத்தான் மாற்று வேட்பாளராக நிறுத்தினார். 2016ம் ஆண்டும் என்னைத்தான் மாற்று வேட்பாளராக அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் 2016ல் வெற்றிப் படிவத்தை பெற்று வந்து ஒப்படைக்க என்னைத்தான் ஜெயலலிதா பணித்தார்.
இரட்டை இலை எங்களுக்கே..
இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற உறுதி எங்களுக்கு இருக்கிறது. பொதுச் செயலாளர் இல்லாத பட்சத்தில் அவைத் தலைவரும், பொருளாளரும்தான் பொறுப்பு. ஆகையால் நாங்கள் இருக்கும் இடம்தான் உண்மையான அதிமுக.
ஓபிஎஸ் பிரச்சாரம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ் கண்டிப்பாக வருவார். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போதும் அவர் உடன் இருப்பார். வெற்றி எங்களுக்கே என்று மதுசூதனன் உறுதியாக கூறியுள்ளார்.