மாவீரர்கள் சுவாசித்த காற்றை நானும் சுவாசிக்க விரும்பினேன்... விடுதலை புலிகளை புகழும் ரஜினி?
இலங்கையில் மாவீரர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க நானும் விரும்பினேன் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களான மாவீரர்கள் களமாடிய புனித இடத்தை பார்வையிட்டு அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க ஆசைப்பட்டேன் என்று நடிகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வவுனியாவில் 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தனது இனத்துக்காக, தனது மக்களுக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்து விட்டனர்.
தங்களை தாங்களே சமாதியாக்கிக் கொண்டு பூமியில் புதைந்து கிடக்கும் வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தையும், நடமாடிய இடத்தையும், புனித போர் நிகழ்ந்த இடத்தையும் பார்க்க ஆவலாக இருந்தேன். அத்துடன் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வெகுநாள்களாக ஆசை இருந்தது.
அதை நிறைவேற்றிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து மனம் திறந்து பேச ஆவலாய் இருந்தேன் என்று ரஜினிகாந்த் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.