ஐஏஎப் ஏஎன் - 32 விமானத்தை தேடும் பணி 2வது நாளாக தீவிரம் - அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆய்வு
சென்னை: மாயமான ஏஎன் 32 விமானத்தை கப்பல் மூலம் தேடும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையியல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்னை வந்துள்ளார். மாயமான விமானம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விமானம் மூலம் தேடும் பணி நடைபெறும் இடங்களில் மனோகர் பாரிக்கர் ஆய்வு நடத்தி வருகிறார்.
சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று அந்தமானுக்கு புறப்பட்ட விமானப்படை விமானம் மாயமானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறை உடனான இணைப்பை இழந்த அந்த விமானத்தில் விமானப்படையைச் சேர்ந்த 29 பேர் பயணித்துள்ளனர்.
மாயமான விமானப் படை விமானத்தில் 12 தமிழர்கள் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. 6 விமானிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4 பேர் பயணித்துள்ளனர். 11 விமானப்படை அதிகாரிகள், 8 கடற்படை வீரர்களும், மாயமான விமானத்தில் சென்றுள்ளனர்.
2வது நாளாக தேடுதல் வேட்டை
மாயமான விமானத்தை தேடும் பணி இரண்டாவது நாளாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனை தேடும் பணியில் விமானப்படையினரும், கப்பல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்னை வந்துள்ளார்
மனோகர் பாரிக்கர்
சென்னை புறப்படுவதற்கு முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரிக்கர், விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தை தேடும் பணியில் ஐஎன்எஸ் ஸ்வாலா இன்று இணைய உள்ளது என்றார்.
தூத்துக்குடி வீரர்
இந்நிலையில் மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் ஒருவர் என தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை அடுத்த செங்கூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், 37, இவர் விமானப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.
குடும்பத்தினர் தவிப்பு
நேற்று மாயமான விமானத்தில் இவரும் பயணித்துள்ளார். மாயமான விமானம் பற்றியும், அதில் பயணித்தவர்களின் நிலை பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லாததால் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். முத்துகிருஷ்ணனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன.
மனோகர் பரிக்கர் ஆய்வு
சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்னை வந்துள்ளார். மாயமான விமானம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விமானம் மூலம் தேடும் பணி நடைபெறும் இடங்களில் மனோகர் பாரிக்கர் ஆய்வு மேற்கொண்டார்.