ஏ என் 32 விமானத்தைக் காணவில்லை- சேலையூர் போலீஸில் விமானப்படை புகார்
சென்னை: காணாமல் போய் விட்ட ஏ என் 32 ரக விமானத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி சென்னை சேலையூர் காவல் நிலையத்தில், இந்திய விமானப்படை சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விமானம் காணாமல் போய் இன்றுடன் 3 நாட்களாகி விட்டன. விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கப்பல்கள், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீவிர தேடுதல் வேட்டை
கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
போலீஸில் புகார்
அதில் 29 பேருடன் ஏஎன் 32 ரக விமானம் தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து கிளம்பிச் சென்றபோது நடு வழியில் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டுள்ளது.
சேலையூர் காவல் நிலையத்தில்
இதுகுறித்த புகார் சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன விமானத்தில் இருந்த 29 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் விமானப்படை புகாரில் கூறப்பட்டுள்ளது.
சட்டரீதியான பார்மாலிட்டி
இந்தப் புகார் சட்ட ரீதியான பார்மாலிட்டிக்காக தரப்படும் புகார் என்று கூறப்படுகிறது. முன்பு கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் காணாமல் போன சமயத்திலும் கூட இதேன்ற புகார் போலீஸில் தரப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.