அமெரிக்காவிலிருந்து திரும்பினார் "சென்னை சூப்பர் கிங்" சீனிவாசன்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வரும் ஐசிசி தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான என்.சீனிவாசன் நேற்று அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் வேகமாக போய் விட்டார்.
துபாயிலிருந்து தனி விமானம் மூலம் சீனிவாசன் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஆர்.எம்.லோதா கமிட்டியானது, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு வாழ்நாள் கிரிக்கெட் தடையை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்திற்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 2 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து இதுவரை சீனிவாசன் உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்புடைய யாரும் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.