இடுக்கியில் பந்த்.. கேரள எல்லையில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
கேரளா இடுக்கியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன.
போடி: கேரள மாநிலம் இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழக வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
தொழில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் மாணவர் அணியினர் நேற்று திருவனந்தபுரத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வீட்டை நோக்கி சென்றது. அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து இன்று இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன.
மேலும், கேரளா மாநிலம் போடி முந்தல் சோதனைச் சாவடியில் தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. திடீர் போராட்டத்தின் காரணமாக கேரளா செல்லும் தமிழக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.