சசிகலா குடும்பத்தால் அதிமுக அழிந்து விடும்.. மாஜி அமைச்சர் எஸ்.ஆர்.ராதா பரபரப்பு பேச்சு
சசிகலா குடும்பத்தினருக்கு அதிமுகவில் பதவி வழங்கினால் கட்சி அழிந்து விடும் என முன்னாள் அமைச்சர் எஸ்ஆர்.ராதா தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா குடும்பத்தினருக்கு அதிமுகவில் பதவி வழங்கினால் கட்சி அழிந்து விடும் என முன்னாள் அமைச்சர் எஸ்ஆர்.ராதா தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு அதிமுக பொதுசெயலாளராக நீடிக்க தகுதி உள்ளதா என்றும் எஸ்ஆர் ராதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் அதிமுக செல்வதை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தமிழக மக்களும் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற அவர் தனது அக்காள் மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து கட்சியை அவரது கட்டுப்பாட்டில் விட்டு சென்றுள்ளார். பல ஆண்டுகளாக கட்சிப்பணியாற்றிய மூத்த தலைவர்கள் இருக்கையில் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவரை சசிகலா கட்சியில் சேர்த்து துணைப் பொதுசெயலாளர் பதவி கொடுத்திருப்பது மூத்த தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசி குடும்பத்தால் அதிமுக அழிந்துவிடும்
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் ஆர் ராதா அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசியதாவது, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிக்க தகுதி உள்ளதா? சசிகலா பொதுச்செயலாளராக நீடித்தால் அவரது குடும்பத்தினரால் அதிமுக அழிந்துவிடக்கூடும் என்ற ஐயம் எழுகிறது.
ஏற்றுக்கொள்ள முடியாது
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பது அல்லது அவரது குடும்பத்தினருக்கு அதிமுகவில் பதவிக் கொடுப்பது என்பது நிச்சயமாக மனப்பூர்வமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அண்ணா சொன்னது உண்மையாவிவிடுமோ?
அண்ணா மறைகிற நேரத்தில் ஒன்றை சொன்னார்கள், இந்தக் கட்சியை அழிப்பதாக இருந்தால், இந்த கட்சியில் இருப்பவன்தான் அதை செய்ய வேண்டுமே தவிர இதற்கு எதிரிகள் வெளியே இருந்து வரமாட்டார்கள் என்று சொன்னார். அது இன்று உண்மையாகிவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறேன்.
அதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக்கை கட்சியினர் தூக்கிப் பிடிப்பதை ஏற்க முடியாது. அவர்களால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.
சசிகலாவுக்கு தகுதி இருக்கிறதா?
கட்சியை வழிநடத்தும் தகுதி சசிகலாவுக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்த பிறகே என்னுடைய நிலைப்பாட்டை அறிவிப்பேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்ஆர்.ராதா தெரிவித்துள்ளார்.