நேர்மையாக இருக்கிறேன் என ஒரு தமிழக அமைச்சராவது சவால்விட முடியுமா? கமல்ஹாசன் ஆவேசம்
தான் நேர்மையாக இருக்கிறேன் என ஒரு தமிழக அமைச்சராவது சவால் விட்டு கூறமுடியுமா என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேத்துடன் கேள்வி எழுப்பினார்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சராவது தான் நேர்மையாக இருக்கிறேன் என சவால் விட்டு கூற முடியுமா என்று கமல்ஹாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபகாலங்களில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக கமல் கூறிய ஒரு கருத்தால் தமிழக அமைச்சர்கள் எந்த அளவுக்கு தரக்குறைவாக பேச வேண்டுமோ அந்த அளவுக்கு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கமல் டுவிட்டரில் போட்ட பதிவுக்கும் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் பேட்டி அளித்தார்.
இருவர் மீது தவறு
அப்போது அவர் கூறுகையில், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் காசு வாங்குவோர் காசு கொடுப்போர் இரண்டு தரப்பினர் மீதும் தான் தவறு இருக்கிறது. இந்த தவறு இப்போது தான் நடக்க ஆரம்பித்துள்ளது. என் திரையுலகமும் காசு கொடுத்து வருகிறது என்று சொல்லச்சொன்னாலும் தவறில்லை, சொல்கிறேன்.
அமைச்சருக்கு பங்கு
இந்த விவகாரத்தில் என் கருத்துக்கு ஒருவர் தான் குரல் கொடுத்தார். இந்த ஊழல் செய்தவர்கள் யார் என்பவர்களது பெயரையும் கூறவில்லை. இப்போது ஒரு அமைச்சரே, ‘கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் யாராவது லஞ்சம் வாங்கியிருக்கலாம். அவர் யார் என்று சொல்லுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்' என்கிறார். அப்போது அவரிடமே, ஏங்க உங்களுக்கு பங்கு வராம அவங்க வாங்கிடுவாங்களா? என்று அமைச்சரிடம் கேட்க முடியுமா?
திரையுலகுக்கு வக்காலத்தா?
ஆனால் நான் கேட்டேன். அதற்காக பழியை அரசு மீது போட்டு, திரையுலகுக்கு வக்காலத்து வாங்கவில்லை. திரையுலகினர் வெறும் வியாபாரி. பயம் காரணமாகத்தான் அவன் கொடுக்கிறான். அது துணிந்து கொடுப்பது அல்ல. என்னை போல எத்தனை பேர் துணிச்சலாக பேசமுடியும்?
நான் ஒழுங்காக இருக்கிறேன்
தமிழ் பட உலகில் கருப்பு பணம் புழங்கவில்லை என சொல்லவே இல்லையே. நான் வாங்கவில்லை என்று சொன்னதில் இருந்தே உங்களுக்கு புரிந்து இருக்கவேண்டும். என்னை போல ஏதாவது ஒரு அமைச்சரை சொல்ல சொல்லுங்கள். ‘நான் ஒழுங்காக இருக்கிறேன், என் மீது வழக்கு இல்லை. சாதி எனக்கு முக்கியம் அல்ல. ஓட்டு விளையாட்டில் சாதியை கொண்டு வந்தது இல்லை. என் வாழ்க்கை நேர்மையானது. நேர்மைக்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். கமல்ஹாசனுடன் பேச தயாராக இருக்கிறேன்' என்று சொல்ல முடியுமா?
அவர்தான் தலைவர்
அப்படி பேசி யாராவது ஒரு அமைச்சர் என் முன்பு வரமுடியுமா? அப்படி யாராவது உண்மையானவராக இருந்து, என் முன்னால் வந்தால் அவர் தான் என் தலைவர். அப்படி யாரும் தமிழகத்தில் ஏன், இந்தியாவிலேயே இல்லை. ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் சொல்வதைத்தானே நான் சொன்னேன். மக்கள் மட்டுமல்ல. ஊடகங்கள் பட்டியல் போட்டு வெளியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் வழங்கப்பட்டதை நடக்கவே இல்லை என்று சொல்கிறீர்களா?
இவ்வாறு கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.