கலாமின் கனவு நனவாகுமா? - ராமேஸ்வரத்தில் கல்லூரி வந்தால் ஆயிரம் கலாம் உருவாகலாம்!
ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் ஆசைக்கேற்ப ராமேஸ்வரத்தில் அரசுக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டால் பல்வேறு மீனவ மாணவர்கள் பயனடைவார்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற தன்னுடைய சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறுகிறார்கள்.
அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேஸ்வரம் தீவில் கல்லூரி இல்லாததால் மீனவ மாணவர்கள் 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.
அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேஸ்வரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறக்கும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வெளியிட்டுள்ளனர்.