என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்.. வீரவசனம் பேசும் தனியரசு எம்எல்ஏ
சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று தனியரசு எம்எல்ஏ தெரிவித்தார்.
கூவத்தூருக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் பண பட்டுவாடா குறித்த குதிரை பேரம் நடைபெற்றதாக கடந்த 2 நாள்களுக்கு முன்னர் ஆங்கில தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டது.
அதில் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவருக்கும் தலா ரூ.10 கோடி அளிக்கப்பட்டதாகவும் வீடியோவில் வெளியானது.
இதனால் தமிழக அரசியலில் பெரும் புயல் வீசியது. அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்த இன்று சட்டசபை கூடியது.
திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கூவத்தூர் பண பேரம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் சட்டசபைக்கு வந்த தமிமுன் அன்சாரி பண பேரத்தில் தான் ஈடுபட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதேபோல் கருணாஸ், தனியரசுவிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முற்பட்டனர். அப்போது இருவரும் தப்பி ஓடினர். எனினும் தனியரசு செய்தியாளர்களிடம் கூறுகையில் தான் பண பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றார்.