வாக்குச் சீட்டு முறையில் நடக்கப்போகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்? பின்னணி காரணம் இதுதான்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 64 பேருக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்தவற்கான இறுதி நாள் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. மொத்தம் 127 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
வேட்புமனுக்கள் ஏற்பு
அதிமுக அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன், பாஜக கங்கை அமரன், தீபா பேரவை தீபா உள்பட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வாபஸ் தேதி
இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் வேட்பாளரின் புகைப்படம், சின்னம் ஆகியன வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும்.
எத்தனை வாக்குப் பதிவு இயந்திரங்கள்
ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் என்பதால் அதிகபட்சமாக 4 வாக்குப் பதிவு இயந்திரங்களை பொருத்த முடியும். இந்த 4 இயந்திரங்களில் 64 வேட்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் சின்னங்கள் பதிவு செய்யப்படும்.
64 வேட்பாளருக்கு மேல்...
64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையிலேயே வாக்குப் பதிவு நடைபெறும். தற்போதைய சூழலில் களத்தில் 82 பேர் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதிநாள் திங்கள்கிழமை ஆகும்.
18 பேர் வாபஸ் பெற்றால்...
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட 82 பேரில் 18 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றால் மட்டுமே வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தமுடியும். இல்லையெனில் வாக்குச் சீட்டு முறைதான் பயன்படுத்த முடியும்.கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தவிர மாற்று வேட்பாளர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகவும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
27-இல் தெரிந்து விடும்
எனவே ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குச் சீட்டு முறையா அல்லது வாக்குப் பதிவு இயந்திரமா என்பது குறித்து வரும் 27-ஆம் தேதி தெரிந்துவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆர்.கே.நகரில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 256 ஆகும். இங்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 4 இயந்திரங்கள் வீதம் பயன்படுத்தும் அளவுக்கு மின்னணு இயந்திரங்கள் புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தயார் நிலையில் உள்ளன.
ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றால் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கலாம் என்பதால் அந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.பி.க்களான இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மனுக்களைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.