சசிகலா உள்ளிட்ட தீய சக்திகளை வெளியேற்றிவிட்டால் நாங்கள் 'அண்ணேன்டா தம்பிடா...' சொல்வது முனுசாமி
அதிமுகவுக்கு தீமையை விளைவிக்கும் சக்தியான சசிகலாவை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன், தம்பிகள்தான் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவுக்கு தீமையை விளைவிக்கும் சக்தியான சசிகலாவை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன், தம்பிகள்தான் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இணைப்பு குறித்து இரு அணிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னரே கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்களும், பேனர்களும் அகற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழல் வரும்போது பேசுவோம். இன்று பேச்சுவார்த்தை , நாளை பேச்சுவார்த்தை என்று நாங்கள் சொல்லவில்லை. நிருபர்களாகிய நீங்கள் செய்திகளை வெளியிடுகிறீர்கள்.
சசிகலா, டிடிவி தினகரன் போன்ற தீய சக்திகளை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அண்ணன், தம்பிகள்தான். இது குடும்பச் சண்டைதான். கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளோம். சசிகலாவும், தினகரனும் கட்சியை கைப்பற்ற துடித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழல் எம்ஜிஆர் மறைந்தபோது கூட வந்ததில்லை. இரு அணிகளாக பிரிந்தோம். மீண்டும் சேர்ந்து கொண்டோம். அவ்வளவே என்றார் கே.பி.முனுசாமி.