மீரா குமார் ஜெயித்தால் நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்படும்- தொல். திருமாவளவன்
ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவதை விட மீராகுமார் வெற்றி பெற்றால் தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
நெல்லை: குடியரசு தலைவர் தேர்தலில் மீரா குமார் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மீனாட்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது: நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்த போலீச்சார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின் படி போலீசார் இந்தக் கட்டுப்பாட்டை விதித்திருக்கலாம்.
இஸ்லாமியர் உரிமை
இஸ்லாமிய மக்கள் வழிபாட்டுக்காக இந்த கூம்புவடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துகிறார்கள். இதில் தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மீராகுமார் வெற்றி
குடியரசுத் தலைவர் தேர்தலை அம்பேத்கரிய இயக்கத்துக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான போராட்டமாகப் பார்க்கிறேன். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் வெற்றிபெற்றால் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சப்போர்ட்
தமிழக விவசாயிகள் பிரச்சனைக்கு பிரதமர் மோடி செவிமடுக்கவில்லை. மொத்த விவசாயத்தையும் அழிக்கும் விதமாகவே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் உள்ளன. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தேசத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்க முடிவு செய்தது போல் உள்ளது.
கமலை அநாகரீகமாக விமர்சிக்கலாமா?
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசியல் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதற்காக அவரை நாகரீகம் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் விமர்சிப்பது அழகு அல்ல.
சசிகலா விவகாரம்
சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது குறித்த விவகாரத்தில் கர்நாடக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது. அந்த விசாரணைக் கமிஷனில் உண்மைகள் வெளிவரும் என்று நம்புவோம்.
தவறான வெளியுறவுக் கொளகைகள்
மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசின் வெளியுறவுக் கொள்கைகள் தான் காரணம். சிங்கள அரசு மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டம் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.
-இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.