மறுபிறவி இருந்தால் இந்தியாவிலேயே மீண்டும் பிறப்பேன்.. இப்படிச் சொன்னவர் நம் கலாம்
சென்னை: மறுபிறவி என ஒன்று இருந்தால் நிச்சயம் மீண்டும் இந்தியாவிலேயே பிறப்பேன் என முன்பொருமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம்.
இந்தியாவில் பிறந்து, இங்கேயே படித்து, ஆராய்ச்சி செய்து, குடியரசுத் தலைவராக பதவி வகித்து, மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்து, தனது இறுதி மூச்சையும் இங்கேயே விட்டுள்ளார் அப்துல் கலாம். அவரது திடீர் மறைவால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கனவு காணச் சொன்னாயே இது கனவாகவே போய் விடக் கூடாதா என மக்கள் வேதனையில் உள்ளனர். முடிந்தால் மீண்டும் உயிர் பெறுங்கள் எங்களுக்கு உங்களைப் போன்ற நல்ல தலைவர் தேவை என சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது சன் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் பேட்டியில் இடம் பெற்ற சில சுவாரஸ்யத் தகவல்களை இங்கே நினைவு கூறலாம்.
கலாமை பேட்டி கண்ட விவேக்...
தனது பரப்பான பணிகளுக்கு இடையே இந்தப் பேட்டிக்கு சம்மதம் தெரிவித்திருந்தார் கலாம். இந்தப் பேட்டியில் கலாமை நகைச்சுவை நடிகர் விவேக் பேட்டி எடுத்திருந்தார்.
மறுபிறவி...
தனது கல்வி, ஏவுகணை வாழ்க்கை உள்பட பலவற்றையும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் கலாம். அப்போது, ‘மறுபிறவி ஒன்று இருந்தால் எப்படி பிறக்க ஆசை?' என கலாமிடம் கேள்வி எழுப்பினார் நடிகர் விவேக்.
மீண்டும் இந்தியாவிலேயே...
அதற்கு கலாம், "மறுபிறவி என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தால் இந்தியாவில் மீண்டும் பிறக்கவே எனக்கு ஆசை.
உலகநாடுகள் அதிசயிக்கும்...
ஏனென்றால் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. வருங்காலத்தின் இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகளை அதிசயிக்கும் வகையில் இருக்கும். அதுபோன்ற சமயத்தில் மீண்டும் இந்தியாவில் பிறக்க வேண்டும்' எனப் பதிலளித்தார்.
நம்பிக்கை தானே வாழ்க்கை...
கலாம் கூறியது போல, மறுபிறவி என ஒன்று இருந்தால் நிச்சயம் அவர் இதேபோன்று இந்தியாவிலேயே பிறந்து மீண்டும் தனது தன்னம்பிக்கை வார்த்தைகளால் நம்மை வழிநடத்துவார் என நம்புவோம்.