தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் வார்னிங்!
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார் என்றும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு பேருந்து போக்குவரத்து 2வது நாளாக முடங்கியுள்ளது.
சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை கோயம்பேட்டில் இருந்து மாநகரப் பேருந்துகளின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் பேருந்துகள்
இதனால் பல மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் பேருந்தில் சென்னை வந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல மாநகர பேருந்து இல்லாததால் தவித்து வருகின்றன.
அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மற்ற மாவட்டங்களில் இருந்து தனியார் பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிக கட்டணம் வசூல்
தனியார் பேருந்துகள் மட்டும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்
இந்நிலையில் சென்னை பெரம்பூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கடும் நடவடிக்கை
அப்போது தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். மேலும் அரசு ஓட்டுநர்கள், நடத்துனர்களை பணிக்கு வரவிடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிறைவேற்றுகிறார்
தொழிலாளர்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார். விரைவில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் இரண்டாவது நாளாக அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.